திங்கள், 27 நவம்பர், 2023

 

ஸ்ரீமத் பகவத் கீதை

 

நான்காவது  அத்தியாயம்

 

ஞான கர்ம சன்யாஸ யோகம்

 

(ஞானத்தைத் தேடுதல் மற்றும் பற்றில்லாமல் செயலாற்றுதல்)

 

(எப்பொழுதெல்லாம் தர்மம் அழியும் நிலைக்கு வருகிறதோ, அப்பொழுதெல்லாம், சாதுக்களைக் காப்பாற்றுவதற்காகவும், தீயவர்களை அழித்து தர்மத்தை மீண்டும் நிலை நாட்டுவதற்காகவும், தன்னைத் தானே படைத்துக்கொள்வதாகவும் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறுகிறார். மேலும், செயல் செய்வதை யாரும் தவிர்க்க முடியாது என்றும், ‘இந்தச் செயலை நான் செய்கிறேன்’ என்று எண்ணாமல், செயலின் விளைவுகளில் பற்று வைக்காமல், செயலாற்றுபவனே சிறந்த யோகி என்றும், அத்தகைய யோகிகள் இந்த உலகத்தில் காணப்படும் பொருட்கள் அனைத்தையும் பிரம்மத்தின் வடிவமாகவே பார்க்கிறார்கள் என்றும் கூறுகிறார். அறிவு என்னும் வாளால், தன் சந்தேகங்களை வெட்டி எறிந்து விட்டு, கர்ம யோகத்தில் முழுவதுமாக ஈடுபடச் சொல்லி அர்ஜூனனை உற்சாகப்படுத்துகிறார், பகவான் கிருஷ்ணர்.) 

1.     பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்:  “ நான் யோகம் என்னும் இந்த நித்தியமான விஞ்ஞானத்தை முதன் முதலில் விவஸ்வானுக்கு ( சூரியன்) உபதேசித்தேன். விவஸ்வான் அதை மனுவுக்கு உபதேசித்தார். பின்னர் மனு அதை இக்ஷ்வாகுவுக்கு உபதேசித்தார்.

 

2.     எதிரிகளைப் பணிய வைப்பவனே! இவ்வறே ராஜரிஷிகள் பரம்பரையாக இந்த யோகஞானத்தைத் தொடர்ந்து பெற்று வந்தார்கள். ஆனால், காலப்போக்கில் அது வழக்கொழிந்து விட்டது.

 

3.     அதே புராதனமான, பரம ரகசியமான, யோகஞானத்தை, உனக்குச் சொல்கிறேன், ஏனென்றால், நீ எனது நண்பன் மட்டும் அல்ல, பக்தனும் கூட. உன்னால் இந்த உயர்ந்த ஞானத்தைப் புரிந்து கொள்ள முடியும். “

 

4.     அர்ஜுனன் கேட்டான்: “விவஸ்வானுக்குப்பிறகு தான் நீ பிறந்திருக்கிறாய். பின் எப்படி முதன்முதலில் நீ அவருக்கு யோக ஞானத்தை உபதேசித்திருக்க முடியும்?”

 

5.     பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்:  “ அர்ஜுனா! நீயும் நானும், பல முறை பிறந்துள்ளோம். பரந்தபனே! எனக்கு என்னுடைய எல்லாப் பிறவிகளும் நினைவில் இருக்கின்றன. ஆனால், உனக்கு அவையெல்லாம் மறந்து விட்டன.

 

6.     உண்மையில், எனக்குப் பிறப்பு என்பது இல்லை. இந்த உயிர்களுக்கெல்லாம், நான் தலைவனாக இருந்த போதிலும், எப்போதும் அழியாத நிலை எனக்கு இருந்த போதிலும், எனது தெய்வீக சக்தியால், யோகமாயை மூலம் நான் இந்த உலகில் தோன்றுகிறேன்.

 

7.     எப்பொழுதெல்லாம் தர்மத்துக்குச் சரிவு ஏற்படுகிறாதோ, எப்பொழுதெல்லாம் அதர்மம் பெருகுகிறதோ, அப்போதெல்லாம், என்னை நானே ஸ்ருஷ்டித்துக் கொள்கிறேன்.

 

8.     அற வழியில் நடப்பவர்களைப் பாதுகாக்கவும், தீயவர்களை அழித்தொழிக்கவும், தர்மத்தை மீண்டும் நிலை நாட்டவும், ஒவ்வொரு யுகத்திலும் நான் தோன்றுகிறேன்.

 

9.     அர்ஜுனா! என்னுடைய் பிறப்பு மற்றும் செயல்களின் தெய்வீகத்தை உணர்ந்து கொள்பவர்கள், இந்த உடலைக் களைந்த பின்னர், மீண்டும் பிறவி எடுக்காமல், என்னுடைய நித்தியமான இருப்பிடத்திற்கு வந்து சேர்கிறார்கள்.

 

10.      பற்று, பயம், கோபம் ஆகியவற்றைத் துறந்து, என்னிலேயே முழுக்க ஈடுபட்டு, என்னில் அடைக்கலம் புகுந்து, என்னைப்பற்றிய ஞானத்தால் தூய்மையடைந்து, முன்னமே, அநேகம் பேர் என்னுடைய அன்பை அடைந்திருக்கிறார்கள்.

 

11.     யார் யார் எந்த வழியில் என்னிடம் வர முயல்கிறார்களோ, அந்த வழிகளிலேயே சென்று நான் அவர்களை அடைகிறேன். பார்த்தனே! அறிந்தோ, அறியாமலோ, எல்லோருமே என் வழியைத்தான் பின்பற்றுகிறார்கள்.

 

12.     இந்த உலகத்தில், லௌகிகமான ( உலகப்பொருட்கள் சம்பந்தப்பட்ட) விஷயங்களில் வெற்றியை விரும்புபவர்கள், தேவதைகளை வழிபடுகிறார்கள், ஏனெனில், லௌகிகமான வெற்றிகள் விரைவில் கிடைத்துவிடுகின்றன.

 

13.     மனிதர்களின் குணங்களையும், அவர்களின் செயற்பாடுகளையும் பொருத்து நான்கு விதமான வர்ணங்களை (பிரிவுகளை) நான் வகுத்தேன். இந்த முறையை நானே ஏற்படுத்தியிருந்தாலும், நான் எந்தச் செயலிலும் ஈடுபடுவதில்லை; எந்த மாற்றமும் அடைவதில்லை.

 

14.     எந்தச் செயலின் கறையும் என் மேல் படிவதில்லை. எந்தச் செயலின் விளைவுகள் மீதும் எனக்கு விருப்பம் இல்லை. ‘நான் இப்படிப்பட்டவன்’ என்று என்னை அறிபவர்கள், செயல்களினால் உண்டாகும் பந்தங்களில் சிக்குவதில்லை.

 

15.     இந்த உண்மையை உணர்ந்ததனால், மோக்ஷத்தை விரும்பியவர்கள் கூட, சும்மா இருக்காமல், தங்களுக்கான செயலை ஆற்றினார்கள். ஆகவே அவர்கள் அடி பற்றி, நீயும் உன் கடமையை நிறைவேற்ற வேண்டும்.

 

16.     செயல் என்பது  என்ன? செயலின்மை என்பது  என்ன? ஞானிகள் கூட இந்த விஷயத்தைத் தீர்மானிப்பதில் குழப்பம் அடைகிறார்கள். நான் உனக்கு செயலாற்றுவதின் ரகசியத்தை இப்போது விளக்குகிறேன். அதை அறிந்தால், லௌகிக பந்தங்களில் இருந்து நீயே உன்னை விடுவித்துக்கொள்ள முடியும்.

 

17.     செய்யத்தக்க செயல்கள் எவை, செய்யக்கூடாத செயல்கள் எவை, செயலாற்றாமை என்றால் என்ன, என்பதையெல்லாம் நீ நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். செயலைப்பற்றிய உண்மை, மிகவும் ஆழமானது மட்டும் அல்ல; அதைப்புரிந்து கொள்வதும் கடினம்.

 

18.எந்தச் செயலையும் செய்யாமல் இருக்கும் போதே, செயல் செய்துகொண்டிருக்க முடியும் என்பதையும்,  நிறைய செயல் செய்யும் போது கூட, ஒன்றும் செய்யாதது போல் இருக்க முடியும் என்பதையும் உணர்ந்தவர்களே உண்மையான ஞானிகள்.  (சோம்பேறித்தனத்தாலோ, விருப்பம் இல்லாததனாலோ, செயல்களைச்செய்யாமல் இருப்பவர்கள் கூட, மனதினால் அந்தச் செயல்களுடன் தொடர்பில் தான் இருக்கிறார்கள். தங்கள் செயல்களின் விளைவுகளைப் பற்றிக்  கவலைப்படாமல் செயலாற்றுபவர்கள் தாங்கள் ஒன்றுமே செய்யாததைப்போல உணர்கிறார்கள்.)

எல்லாச் செயல்களையும் செய்து கொண்டிருந்தாலும், அவர்கள் தான் யோகிகள். அவர்கள் தங்கள் செயல்களுக்கு எஜமானர்கள்.

 

19.உலக இன்பங்களுக்கு ஆசைப்படாமல் யார் செயல் செய்கிறார்களோ, யார் தங்கள் தெய்வீக அறிவாகிய நெருப்பில், தங்கள் செயல்களின் விளைவுகளை எரித்து விட்டார்களோ, அவர்களைத் தான் ஞானிகள் என்று அறிவொளி பெற்ற முனிவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

 

20.அத்தகையவர்கள் தங்கள் செயல்களின் விளைவுகளின் மேல் உள்ள பற்றைத் துறந்து விட்டதால், எப்போதும் திருப்தியுடன் இருக்கிறார்கள். அவர்கள் வெளியில் உள்ள பொருட்களை நம்பி இல்லை. செயலில் இடையறாது ஈடுபட்டுள்ள போதிலும், அவர்கள் எதுவுமே செய்யாதவர்கள் போல் தான் இருக்கிறார்கள்.

 

21.எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், இது என்னுடையது என்ற உரிமை உணர்வு இல்லாமல், தங்களது மனத்தையும் அறிவையும் முழுமையாகக் கட்டுப்படுத்தி வைத்துக்கொண்டு, உடலால் மட்டுமே அவர்கள் செய்யும் செயல்களால் எந்த விதப் பாவமும் அவர்களை அண்டுவதில்லை.

 

22.தானாகக் கிடைப்பதை வைத்துக்கொண்டு திருப்தியடைந்து, பொறாமை இன்றி, வாழ்க்கையில் உள்ள இரட்டைகளைக்கடந்து அவர்கள் வாழ்கிறார்கள். ( வாழ்வில், நன்மை-தீமை, பகல்-இரவு, சரி-தவறு, நண்பன்-பகைவன், போன்ற இரட்டைகள் உண்டு. அவை சாதாரணமானவர்களைப் பாதிக்கும்.) வெற்றியையும், தோல்வியையும் சமமாகப் பாவிக்கும் அவர்கள் எந்தச் செயல் புரிந்தாலும், அதன் விளைவுகள் அவர்களைக் கட்டுப் படுவத்துவதில்லை.

 

23.உலகப்பொருட்களின் மேல் உள்ள பற்றினால் ஏற்படும் பந்தங்களில் இருந்து விடுபட்டுவிட்ட அவர்களுடைய புத்தியானது தெய்வீக ஞானத்திலேயே நிலை பெற்றிருக்கிறது. அவர்கள் செய்யும் செயல்களை எல்லாம் இறைவனுக்கு அர்ப்பணிக்கும் வேள்வியாக நினைத்துச் செய்வதால், தாங்கள் செய்யும் செயல்களின் விளைவுகளில் இருந்து அவர்கள் விடுதலை பெற்று விடுகிறார்கள்.

 

24.இறையுணர்வில் முழுவதுமாக ஆழ்ந்துள்ளவர்களுக்கு, வேள்வியில் இறைவனுக்காக அளிக்கும் காணிக்கைப்பொருட்கள் அனைத்தும் இறைவன் தான்.  எந்த நெருப்பில் அந்தக் காணிக்கை அளிக்கப்படுகிறாதோ, அந்த நெருப்பும் இறைவன் தான். காணிக்கை அளிப்பவனும் இறைவன் தான், அந்த வேள்வியினால் கிடைக்கும் பலனும் இறைவன் தான். வேள்வியின் பலனை அனுபவிப்பவனும் இறைவன் தான். இவ்வாறு அனைத்திலும் இறைவனைக் காண்பவர்கள், எளிதாக இறைவனை அடைகிறார்கள்.

 

25.ஒரு சில யோகிகள் தேவதைகளுக்குப் பொருட்களைக் காணிக்கையாக அளிக்கிறார்கள். ஆனால், சரியான விதத்தில் வழிபாடு செய்பவர்கள் தங்களுடைய ஆத்மாவையே, பரம்பொருளுக்குக் காணிக்கையாக அளிக்கிறார்கள்.

 

26.சிலர் புலனடக்கம் என்ற வேள்வித்தீயில் தங்கள் புலன்களை அர்ப்பணிப்பதன் மூலம் வழிபாடு செய்கிறார்கள். வேறு சிலர் புலன்களையே இறைவனை உணர்வதற்கான வழிகளாகக்கண்டு, அவை மூலமே வழிபாடு செய்கிறார்கள்.

 

27.இன்னும் சிலர், நல்லறிவால் உந்தப்பட்டு, தங்களுடைய  புலன்கள் ஆற்றும் செயல்களையும், தங்களுடைய வாழ்வின் ஆற்றலையும், மன அடக்கம் என்ற நெருப்பில் அர்ப்பணிக்கிறார்கள். 

 

28.சிலர் தங்கள் செல்வங்களை அர்ப்பணிக்கிறார்கள். சிலர் தவத்தை அர்ப்பணிக்கிறார்கள். சிலர் அஷ்டாங்க (எட்டு வகை) யோகத்தை அனுசரிக்கிறார்கள், மற்றும் சிலர் சாஸ்திரங்களைக் கற்று, நல்லறிவு பெற்றுக், கடினமான மன உறுதியுடன் வாழ்கிறார்கள்.

 

29.மற்றும்  சிலர், வெளியே விடும் மூச்சை உள்ளே வரும் மூச்சுக்குக் கொடுக்கிறார்கள்; வேறு சிலர் உள்ளே வரும் மூச்சை வெளியே விடும் மூச்சுக்குக் கொடுக்கிறார்கள். சிலர் உள்ளே வந்து வெளியே போகும் மூச்சைப் பிராணாயாமத்தின் மூலம் கட்டுப்படுத்தித் தன் வாழ்வின் சக்தியை ஒழுங்குபடுத்துகிறார்கள்.

 

30.இன்னும் சிலர் தாங்கள் உண்ணும் உணவில் கட்டுப்பாடு வைத்துக்கொண்டு, தங்கள் மூச்சை வாழ்வின் சக்திக்கு அர்ப்பணிக்கிறார்கள். இப்படி எது செய்தாலும், இவர்கள் அனைவருமே தங்கள் மாசு நீங்கப் பெறுகிறார்கள்.

 

31.வேள்வியின் ரகசியத்தை அறிந்து, அதில் ஈடுபடுபவர்கள், ஆதி அந்தமில்லாத பரம்பொருளை நோக்கிச்செல்கிறார்கள். குரு வம்சத்தவருள் சிறந்தவனே! இத்தகைய வேள்விகளைச் செய்யாதவர்கள் இந்த உலகிலோ, அல்லது  அடுத்த உலகிலோ, இன்பத்தை அடைவதில்லை.

 

32.இப்படிப்பட்ட பல விதமான வேள்விகளைப்பற்றி, வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வேள்விகள் அனைத்தும், செயல்களில் இருந்தே தொடங்குகின்றன. இதைப் புரிந்து கொண்டால், உலகப் பொருட்களின் மீது உள்ள பந்தம் அறுபடுகிறது.

 

33.பரந்தபனே! ஞான வேள்வியானது, பொருட்களால் செய்யப்படும் வேள்வியை விட உயர்ந்தது. எப்படியும், எல்லா வேள்விகளும் ஞானத்தில் தான் வந்து சேருகின்றன.

 

34.ஒரு ஆன்மீக குருவை அடைந்து அவரிடம்,  மரியாதையுடன் கேள்விகள் கேட்டு, அவருக்குத் தேவையான சேவைகளைச்செய்து, உண்மையை அறிந்து கொள்வாய்! உண்மையை உணர்ந்த அப்படிப்பட்ட ஒரு முனிவரால் மட்டுமே இந்த அறிவை உனக்குப் புகட்ட முடியும்.

 

35.அர்ஜுனா! இந்த வழியைப்பின்பற்றி, ஒரு சிறந்த குருவிடம் ஞானம் பெற்ற பின்னர், நீ மீண்டும் மாயையில் விழமாட்டாய். அந்த ஞானத்தின் ஒளியில், உயிர்கள் அனைத்தும், பரம்பொருளின் அங்கங்களே என்பதையும், அவைகள் அனைத்தும் என்னுள் இருக்கின்றன என்பதையும் காண்பாய்!

 

36.மிகவும் மோசமான பாவிகள் கூட, இந்தப் பிறவிப் பெருங்கடலை, தெய்வீக அறிவு என்ற படகில் அமர்ந்து கடந்து விட முடியும்.

 

37.கொழுந்து விட்டு எரியும் நெருப்பானது எவ்வாறு விறகை எரித்துச் சாம்பலாக்குகிறதோ, அவ்வாறே ஞானம் என்னும் நெருப்பானது உலகப்பொருட்களுடன் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளின் விளைவுகளை முழுவதுமாக எரித்து விடுகிறது.

 

38.இந்த உலகில், ஞானத்தைப்போலத் தூய்மைப் படுத்துவது எதுவும் இல்லை. நீண்ட காலம் யோகப்பயிற்சி செய்து, மனத்தூய்மை அடைந்தவர், காலப்போக்கில் அத்தகைய ஞானத்தை அடைகிறார்.

 

39.ஆழ்ந்த சிரத்தையுடன் தங்கள் மனத்தையும், புலன்களையும் அடக்கிப் பயிற்சி மேற்கொண்டவர்கள் தெய்வீக ஞானத்தை அடைகிறார்கள். அத்தகைய உயர்ந்த ஞானத்தின் மூலம் , விரைவிலேயே நிரந்தரமான அமைதியைப் பெறுகிறார்கள்.

 

40.ஆனால், சிரத்தையும் இல்லாமல், ஞானமும் இல்லாமல், எல்லாவற்றையும் சந்தேகப்படுபவர்கள், வீழ்ச்சியடைகிறார்கள். அவநம்பிக்கை உடையவர்களுக்கு, இப்பிறவியில் மட்டும் அல்ல, அடுத்த பிறவியிலும் மகிழ்ச்சி கிடைக்காது.

 

41.செல்வங்களை வெற்றி கொள்ளும் தனஞ்சயனே! யோகம் என்னும் நெருப்பில் தங்கள் செயல்களைத் துறந்தவர்களையும், ஞானத்தால் தங்கள் சந்தேகங்களைப் போக்கிக் கொண்டவர்களையும் , ஆத்மஞானத்தில் மூழ்கி இருப்பவர்களையும், செயல்கள் கட்டுப்படுத்துவதில்லை.

 

42.ஆகவே, பரத வம்சத்தோன்றலே! அறிவு என்னும் கூரிய வாளால், உன் மனதில் தோன்றும் சந்தேகங்களை வெட்டி எறிந்து விட்டு, உன்னைக் கர்மயோகத்தில் நிலை நிறுத்திக் கொள்வாயாக! எழுந்து, செயலில் இறங்குவாயாக!

 

 

சுபம்

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக