புதன், 31 ஜனவரி, 2024

 ஸ்ரீமத் பகவத் கீதை

பதினேழாவது அத்தியாயம்

 ஸ்ரத்தா த்ரய விபாக யோகம்

 ஸ்ரத்தையின் மூன்று வகைகள்


(இந்த அத்தியாயத்தில், மூன்று வகையான சிரத்தைகளைப் பற்றியும், அவற்றின் இயல்பைப் பற்றியும், கூறுவது மட்டும் அன்றி, மூன்று வகையான உணவுப் பழக்கங்களைப் பற்றியும், மூன்று வகையான வேள்விகளைப் பற்றியும், உடலினால் செய்யும் தவம், வாக்கினால் செய்யும் தவம், மனத்தினால் செய்யும் தவம் ஆகியவை பற்றியும், மூன்று விதமான தானங்கள் பற்றியும், ஸ்ரீ க்ருஷ்ணர் விளக்குகிறார்.)

1. அர்ஜுனன் கேட்டான்: “க்ருஷ்ணா! சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றாமல், அதே சமயம் மிகவும் சிரத்தையுடன் வழிபடுவோரின் நிலை யாது? அவர்களின் சிரத்தை எந்த குணத்தின் பாற்பட்டது –– ஸத்வ குணத்தையா, ரஜோ குணத்தையா அல்லது தமோ குணத்தையா?”

 

2.     ஸ்ரீ பகவான் கூறினார்: “எல்லா மனிதர்களுமே, இயற்கையாகவே, சிரத்தையுடன் தான் பிறக்கிறார்கள். அது, ஸத்வ குணத்தைச் சார்ந்ததாக இருக்கலாம், ரஜோ குணத்தைச் சார்ந்ததாக இருக்கலாம்,  அல்லது தமோ குணத்தைச் சார்ந்ததாக இருக்கலாம். இந்த மூன்று வகையான சிரத்தைகளைப் பற்றிக் கூறுகிறேன், கேள்.

 

3.      எல்லா மனிதர்களின் சிரத்தையும் அவர்களுடைய மன இயல்பைப் பொருத்தது தான். எல்லாருக்குள்ளும் சிரத்தை இருக்கிறது. ஒரு மனிதனின் சிரத்தை எப்படிப்பட்டதோ, அவன்  அப்படிப்பட்ட மனிதனாகத்தான் இருப்பான்.

 

4.     ஸத்வ குணமுடையவர்கள்  தெய்வங்களை வழிபடுவார்கள். ரஜோ குணமுடையவர்கள், செல்வத்துக்கும் வலிமைக்கும் அதிபதிகளான யக்ஷர்களையும், ராக்ஷஸர்களையும் வழிபடுவார்கள். தமோ குணமுடையவர்கள், பேய், பூதங்களை வழிபடுவார்கள்.

 

5.     ஆசையாலும், அதிகப் பற்றினாலும், தூண்டப்பட்டு, பெருமைக்காகவும், தன் முனைப்பினாலும், சிலர் சாஸ்திரங்களில் சொல்லப்படாத, கடுமையான தவம் செய்வார்கள். 

 

6.     அப்படிச் செய்பவர்கள் தங்கள் புலன்களைத் துன்புறுத்துவது மட்டும் அல்லாமல், அவர்களுக்குள் இருக்கும் பரமாத்மாவான எனக்கும், துன்பம் விளைவிக்கிறார்கள். இவ்வாறான அறிவற்ற செயலைச் செய்பவர்கள் அசுர இயல்பினர் என்று அறிந்து கொள்.

 

7.     மனிதர்கள் விரும்பி உண்ணும் உணவிலும் இப்படிப்பட்ட வேறுபாடுகள் உண்டு. இதே போல் தான், அவர்கள் செய்யும் வேள்விகள், தவம், தானம் ஆகியவையும் பல தரப்பட்டவை. அந்த வேறுபாடுகளைப்பற்றிக் கூறுகிறேன், கேள்.

 

8.     ஸாத்வீக வழியில் செல்பவர்கள், நீண்ட ஆயுளைத்தரக்கூடிய, நற்குணங்களை வளர்க்கக்கூடிய,  ஆரோக்கியம், மகிழ்ச்சி, திருப்தி ஆகியவைகளைத் தரக்கூடிய உணவு வகைகளை விரும்பி உண்கிறார்கள்.  அத்தகைய உணவு வகைகள், சாறு நிரம்பியும், சதைப்பற்று உள்ளவையாகவும், ஊட்டச்சத்து மிக்கவையாகவும், இதயத்துக்கு நன்மை பயப்பனவாகவும், அமைந்திருக்கும்.

 

9.     கசப்பு, புளிப்பு, உப்பு, சூடு, காரம் ஆகியவை அதிகம் உள்ள, மிளகாய் அதிகம் கலந்த, உலர்ந்த உணவு வகைகளை ராஜஸ குணமுடையவர்கள் விரும்பி உண்கிறார்கள். இத்தகைய உணவு வகைகள், வலி, துன்பம், நோய் ஆகியவற்றை உண்டாக்கும்.

 

10.அதிகமாக வேக வைத்த, பழைய, கெட்டுப்போன, மாசுபட்ட, சுத்தமற்ற மற்றும் மீந்து விட்ட உணவு வகைகளைத் தாமஸ குணமுடையோர் விரும்பி உண்கிறார்கள்.

 

11.ஸத்வ குணமுடையவர்கள் வேள்விகள் செய்யும் போது, எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல், சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளின் படி, அதைத் தனது கடமையாக நினைத்துச் செய்வார்கள்.

 

12.பரத வம்சத்தோன்றலே! ரஜோ குணமுடையவர்கள், பொருட்களை அடைய வேண்டியும், பெருமைக்காகவும் வேள்விகள் செய்வார்கள்.

 

13.தமோ குணமுடையவர்கள் சிரத்தையில்லாமல், சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள விதி முறைகளைப் பின்பற்றாமல், நிவேதனம் எதுவும் செய்யாமல், மந்திரங்கள் சொல்லாமல், தானம் கொடுக்காமல், வேள்விகள் செய்வார்கள்.

 

14.இறைவன், அந்தணர்கள், ஆன்மீக குரு, ஞானிகள், பெரியோர் ஆகியோரைத்  தூய்மை, எளிமை, பிரம்மச்சரியம், அஹிம்சை ஆகியவற்றுடன் வழிபடுதல், உடலினால் செய்யப்படும் தவம் எனப்படும்.

 

15.பிறருக்குத் துன்பம் தராதவையாகவும், உண்மையானவையாகவும், பிறருக்கு பாதிப்பு ஏற்படுத்தாதவையாகவும், நன்மை பயப்பனவாகவும் உள்ள சொற்களைப் பேசுவதும், வேத சாஸ்திரங்களை ஓதுவதும், வாய் வழியே செய்யும் தவமாகும்.

 

16.மனத்தினால் செய்யப்படும் தவம் என்பதாவது, ஆழ்ந்த அமைதியுடன் கூடிய சிந்தனை, மென்மை, சத்தமில்லாத அமைதி, சுய கட்டுப்பாடு, நோக்கத்தில் தூய்மை ஆகியவை ஆகும்.

 

17.எந்த விதப் பலனையும் எதிர்பார்க்காமல், இப்படிப்பட்ட மூன்று வகையான தவத்தில் ஈடுபடுபவர்கள், ஸத்வ குணம் கொண்டவர்கள் எனப்படுகிறார்கள்.

 

18.கௌரவம், மரியாதை, அன்பு ஆகியவற்றைப் பெறுவதற்காக, ஆடம்பரமாகச் செய்யும் தவம் ரஜோகுணத்தவர்கள் செய்வது. அதனால் கிடைக்கும் நன்மைகள் தாற்காலிகமானவை; மாறக்கூடியவை.

 

19.தமோ குணத்தவர்கள், குழப்பமான எண்ணங்களுடன்,   தங்களைத் தாங்களே துன்புறுத்திக் கொள்வதல்லாமல், பிறருக்கும் தீங்கு செய்யும் வண்ணம் தவம் செய்கிறார்கள்.

 

20.தானம் செய்வது நல்லது என்ற ஒரே காரணத்திற்காக, எந்தவிதமான பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், உரிய நேரத்தில், உரிய இடத்தில், தகுதியுள்ள மனிதருக்குக் கொடுக்கப்படும் தானம் ஸாத்விகமான தானம்.

 

21.விருப்பமில்லாமலும், பிரதிபலன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலும், செய்யப்படும் தானம் ரஜோ குணத்தைச் சார்ந்தது.

 

22.தவறான நேரத்தில், தவறான இடத்தில், தகுதி யில்லாதவர்களுக்கு, மரியாதை இல்லாமல், அவமதிப்புடன் கொடுக்கப்படும் தானம் தமோ குணத்தவருக்கானது.

 

23.படைப்பின் தொடக்கத்தில் இருந்தே, ‘ஓம் தத் ஸத்’ என்னும் வார்த்தைகள் அறுதியான உண்மைப்பொருளைக் குறிக்கும் குறியீடுகள் என்று சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. முதன் முதலில், அவற்றில் இருந்து தான் வேதங்களும், வேதம் ஓதும் அந்தணர்களும், வேள்விகளும் வந்தன.

 

24.ஆகவே தான், பிரம்மவாதிகள்(பிரம்மத்தை அறிவதையும், அதில் ஐக்கியமாவதையும் குறிக்களாகக் கொண்டவர்கள்) வேள்வியைத் தொடங்கும் போதோ, தானம் கொடுக்கும் போதோ, தவத்தைத் தொடங்கும் போதோ, வேதங்களில் விதித்துள்ள படி, ‘ஓம்’ என்ற ஒலியுடன் தொடங்குகிறார்கள். 

 

25.மோக்ஷத்தை விரும்புவோர், உலகப்பொருட்கள் தொடர்பான ஒரு பலனையும் எதிர் பார்க்காவிட்டாலும், தவம், வேள்வி, தானம் ஆகியவை செய்யும் முன் ‘தத்’ என்ற ஒலியுடன் தொடங்குகிறார்கள்.

 

26.‘ஸத்’ என்ற வார்த்தைக்கு, ‘ நிரந்தர வாழ்வு’ மற்றும், ‘நல்லது’ என்ற பொருள் உண்டு. அர்ஜுனா! மங்களமானவற்றைக் குறிப்பதற்கும், இந்த வார்த்தை உபயோகப் படுத்தப்படுகிறது.

 

27.வேள்விகள், தவம், தானம் ஆகியவற்றில் நிலைத்திருப்பதால், ‘ஸத்’ என்ற வார்த்தை இவைகளையும் குறிக்கிறது.  ஆகவே, இந்த விஷயங்களுக்காகச் செய்யப்படும் செயல்கள், ‘ஸத்’ என்று சொல்லப்படுகின்றன.

 

28.பார்த்தனே! சிரத்தையில்லாமல் செய்யப்படும் வேள்வியோ, தவமோ, தானமோ, ‘அஸத்’ எனப்படுகிறது. அப்படிப்பட்ட செயல்களால், இந்த உலகத்திலும் பயன் இல்லை; அடுத்த உலகத்திலும் பயன் இல்லை.

 

சுபம்

 

https://www.blogger.com/blog/post/edit/8301939112718011873/8710789251708691116

https://www.blogger.com/blog/posts/8301939112718011873

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக