ஸ்ரீமத் பகவத் கீதை
பதினொன்றாவது அத்தியாயம்
பகவானின் விஸ்வரூபத்தைக் காணுதல்
(அர்ஜுனனின் வேண்டுகோளுக்கிணங்க பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்
அர்ஜுனனுக்குத் திவ்ய த்ருஷ்டியைக் கொடுத்த பின்னர், தனது விஸ்வரூபத்தைக் காட்டுகிறார்.
வார்த்தைகளால் விளக்க முடியாத அளவு பிரம்மாண்டமாகவும், பிரகாசமாகவும், அழகாகவும், அதேசமயம்,
பயங்கரமாகவும் உள்ள அந்தக் காட்சியைக் கண்டு பிரமிப்பும், அச்சமும் கொள்கிறான், அர்ஜூனன்.
பின்னர், மீண்டும் தனது சாதாரண உருவத்தை எடுத்துக்கொண்ட ஸ்ரீ க்ருஷ்ணர் பக்தியாலும்,
சரணாகதியாலும் மட்டுமே அவரை அடைய முடியும் என்பதை அர்ஜூனனுக்குத் தெளிவாக உரைக்கிறார்.)
1. அர்ஜுனன்
கூறினான்: “ என் மேல் தயை கூர்ந்து, மிகவும் ரகசியமான, இந்த உயர்ந்த ஆத்ம ஞானத்தை நீ எனக்கு போதித்ததால்,
என்னைப் பிடித்திருந்த மாயை விலகி விட்டது.
2. தாமரைக்கண்ணனே!
உயிர்களின் தோற்றத்தைப் பற்றியும், மறைவைப் பற்றியும் , உன்னுடைய, எப்போதும் மாறாத
மகிமையைப் பற்றியும், உன்னிடம் இருந்து விவரமாகத் தெரிந்து கொண்டேன்.
3. பரமேஸ்வரா!
நீ உன்னைப்பற்றி எப்படி விவரித்தாயோ, அப்படியே இருக்கிறாய். புருஷோத்தமா! இப்போது நான்
உன்னுடைய தெய்வீகமான உருவத்தைக்காண ஆசைப்படுகிறேன்.
4. ப்ரபோ!
யோக வித்தைகளுக்கெல்லாம் தலைவனே! என்னால் உன் அழிவற்ற திவ்ய ஸ்வரூபத்தைப் பார்க்க முடியும்
என்றால், அதை எனக்குக் காட்டி அருள்வாயாக!”
5. ஸ்ரீ
பகவான் கூறினார்: “பார்த்தனே! பலவிதமான வண்ணங்களிலும், அளவுகளிலும், வடிவங்களிலும்
உள்ள எனது நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆச்சரியமான உருவங்களைப்பார்!
6. பரதகுலத்
தோன்றலே! அதிதியின் பன்னிரண்டு புதல்வர்களையும், அஷ்ட வசுக்களையும், பதினொன்று ருத்திரர்களையும்,
இரட்டையாயுள்ள அஸ்வினி குமாரர்களையும், நாற்பத்தொன்பது மருதர்களையும், இது வரை யாருக்கும்
காட்டப்படாத ஆச்சரியங்களையும் என்னில் பார்!
7. குடாகேசனே!
( உறக்கத்தை வென்றவனே) அசையும் பொருட்களாலும், அசையாப்பொருட்களாலும் ஆன இந்தப் பிரபஞ்சம்
முழுவதும் என்னில் அமைந்திருப்பதைப் பார். வேறு எதையாவதை நீ பார்க்க விரும்பினாலும்,
அதையும் என்னுடைய இந்த உடலுக்குள்ளே பார்!
8. ஆனால்,
இந்தப் புறக்கண்களைக்கொண்டு உன்னால் என்னுடைய தெய்வீக ரூபத்தைக்காண முடியாது. ஆகவே,
உனக்கு திவ்ய த்ருஷ்டியைத் தருகிறேன். என்னுடைய கம்பீரமான சிறப்புகளைப் பார்!”
9. ஸஞ்சயன்
கூறினார்: “அரசே! இவ்வாறு கூறி, யோகேஸ்வரனான ஸ்ரீ க்ருஷ்ணன், தன்னுடைய திவ்யமான, ஐஸ்வர்யம்
நிறைந்த வடிவத்தை அர்ஜுனனுக்குக் காட்டினார்.
10.அந்த
திவ்ய ரூபத்தில், அர்ஜுனன் எண்ணில் அடங்காத முகங்களையும், கண்களையும், தெய்வீகமான ஆபரணங்களையும்
, பல விதமான திவ்யமான ஆயுதங்களையும் கண்டான்.
11.பல
வித திவ்யமான மாலைகளை அணிந்து கொண்டும், திவ்யமான மணம் வீசும் வாசனைத் திரவியங்கள்
பூசிய உடலுடனும், எல்லாத் திசைகளிலும் முகங்கள் கொண்ட அந்தப்பரம்பொருள் தன்னுடைய ஆச்சரியமான,
முடிவற்ற உருவத்தைக் காட்டி அருளினார்.
12.ஆயிரம்
சூரியன்கள் ஒரே நேரத்தில் உதித்தால் கூட, அவர்களின் பிரகாசம், அந்தப் பரம்பொருளின் அற்புத வடிவின் பிரகாசத்துக்கு
ஈடாகாது.
13.அப்போது
அர்ஜுனன், பலவாறாகப் பிரிந்து காணப்படும் இந்தப் பிரபஞ்சம் முழுவதையும், தேவர்களுக்கெல்லாம்
தேவனான அந்தப்பரம்பொருளின் உடலில், ஒருசேரக் கண்டான்.
14.பின்னர்,
நம்ப முடியாத ஆச்சரியத்துடன், மயிர்க்கூச்செறியும்
உடலுடன், கைகளிரண்டையும் கூப்பித், தலை வணங்கி, அந்தத் தேவனிடம் பேசலானான்.
15.“
ஸ்ரீ கிருஷ்ணா! உன் உடலுக்குள்ளே, நான் அனைத்துக் கடவுளர்களையும், பல விதமான உயிர்க்
கூட்டங்களையும் காண்கிறேன். தாமரை மலர் மேல் அமர்ந்திருக்கும் பிரம்மாவையும், சிவபெருமானையும்,
எல்லா முனிவர்களையும், எல்லா தெய்வீகமான சர்ப்பங்களையும் காண்கிறேன்.
16.நீ
எண்ணற்ற கைகளுடனும், எண்ணற்ற வயிறுகளுடனும், எண்ணற்ற முகங்களுடனும், எண்ணற்ற கண்களுடனும்
இருப்பதை நான் காண்கிறேன். இந்தப் பிரபஞ்சத்தின் தலைவனே! இந்தப் பிரபஞ்சத்தையே உருவமாகக்
கொண்டவனே! உன்னுடைய தொடக்கத்தையோ, நடுவையோ, முடிவையோ என்னால் காண முடியவில்லை.
17.கிரீடம்
அணிந்து கொண்டு, கதையையும் சக்ராயுதத்தையும் கையில் கொண்டு, உன் ஒளி வெள்ளத்தால் எல்லா
இடங்களையும் நீ ஒளி மயமாக்குவதைக் காண்கிறேன். கொழுந்து விட்டெரியும் நெருப்பைப்போன்று
எல்லா திசைகளிலும் பரவி, சூரியனைப்போல ஜ்வலிக்கும் உன்னுடைய பிரகாசத்தால் (கண்கள் கூசுவதால்)
, உன்னைப்பார்க்கவே முடியவில்லை.
18.நீ
தான் அறிந்து கொள்ளப்பட வேண்டிய முழுமையான, பரம்பொருள் என்பதை நான் உணர்கிறேன். இந்தப்படைப்பையெல்லாம்
தாங்கிக் காப்பவன் நீ. அழியாத தர்மத்தை எப்போதும் பாதுகாப்பவன் நீ. நீ தான் எப்போதும்
இருக்கும் மகோன்னதமான பரமபுருஷன்.
19.நீ
தொடக்கமும், நடுவும், முடிவும் அற்றவன். உன் சக்திக்கு அளவே இல்லை. நீ எல்லையற்றவன்.
சூரியனும், சந்திரனும் உனது கண்கள். உன் திருவாயில் இருந்து ஜ்வலிக்கும் நெருப்பு வெளிவருகிறது.
உன் பிரகாசத்தால், இந்த படைப்பனைத்தையும் நீ ஒளிர வைக்கிறாய்.
20.உயிர்களுள்
மகோன்னதமானவனே! ஆகாயத்துக்கும், பூமிக்கும் இடையில் உள்ள எல்லா இடங்களிலும் நீ நிரம்பியிருக்கிறாய்.
உன்னுடைய அற்புதமான, அதே சமயத்தில் பயங்கரமான வடிவத்தைக்கண்டு இந்த மூன்று உலகங்களும்
நடுங்கிக் கொண்டிருக்கின்றன.
21.தேவர்கள்
எல்லாம் உன்னிடம் புகலடைகிறார்கள். சிலர், பயத்துடன் கைகளைக் கூப்பி உன்னைப் புகழ்கிறார்கள்.
மகரிஷிகளும், முழுமை அடைந்த சித்தர்களும், மங்களகரமான ஸ்தோத்திரங்களாலும், பாடல்களாலும்
உன்னைத் துதிக்கிறார்கள்.
22.ருத்திரர்களும்,
ஆதித்யர்களும், வசுக்களும், சாத்யர்களும், விஸ்வதேவர்களும், அஷ்வினி குமாரர்களும்,
மருதர்களும், பித்ருக்களும், கந்தர்வர்களும், யக்ஷர்களும், அசுரர்களும், சித்தர்களும்,
உன்னை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
23.வலிமை
பொருந்தியவனே! பல வாய்களும், பல கண்களும், பல கைகளும், பல தொடைகளும், பல கால்களும்,
பல வயிறுகளும், பயங்கரமான பற்களும் உடைய உன்னைக் கண்டு, எல்லா உலகங்களும் பயந்து நடுங்கிக்
கொண்டிருக்கின்றன. நானும் தான்.
24.ஓ
விஷ்ணுவே! பல வர்ணங்களைக்கொண்டு, அகலத்திறந்த வாயுடனும், ஒளியைப் பாய்ச்சும் மிகப்பெரிய
கண்களுடனும் காணப்படும் உன்னுடைய விண்ணை முட்டும் வடிவத்தைக் கண்டு, என்னுடைய அந்தராத்மா
பயத்தால் நடுங்குகிறது. என் தைரியத்தையும்,
அமைதியையும், நான் இழந்து நிற்கிறேன்.
25.ஒரேயடியாக
அழிக்கும் பெரு நெருப்பைப்போன்ற, பயங்கரமான பற்களையுடைய உன்னுடைய பல வாய்களைக்கண்டு,
நான் எங்கிருக்கிறேன் என்பதையே மறந்து விட்டேன். எங்கே போகவேண்டும் என்பதும் எனக்குப்
புரியவில்லை. தேவர்களின் தலைவனே! இந்தப் பிரபஞ்சத்தின் புகலிடமே! என் மேல் இரக்கம்
காட்டு!
26.திருதராஷ்டிரரின்
அனைத்துப் புதல்வர்களும், அவர்கள் அணியில் உள்ள அரசர்களும், பீஷ்மர், த்ரோணாச்சாரியர்,
கர்ணன் போன்றோரும், எங்கள் அணியின் தளபதிகளும்,
27.
உன்னுடைய பயங்கரமான வாய்களுக்குள் அவசர அவசரமாக நுழைவதைப் பார்க்கிறேன். உன்னுடைய பயங்கரமான
பற்களுக்கிடையே சிக்கிக்கொண்டு, சிலருடைய மண்டைகள் நசுங்கி, உடைவதையும் பார்க்கிறேன்.
28.நதிகளின்
அலைகள் எவ்வாறு வேகத்துடன் சமுத்திரத்துக்குள் நுழைகின்றனவோ, அதே போல், இந்த மகத்தான
போர்வீரர்கள், உன்னுடைய எரிகின்ற வாய்களுக்குள் நுழைகிறார்கள்.
29.எரிகின்ற
நெருப்பில் வீழ்ந்து மடிவதற்காக, அதி வேகமாகப் பறந்து வரும் விட்டில் பூச்சிகளைப்போன்று,
இந்த சேனைகள் உன்னுடைய வாய்க்குள் பெருவேகத்துடன் வந்து புகுந்து கொள்கின்றன.
30.விஷ்ணுவே!
உன்னுடைய தீ நாக்குகளால் சுழற்றி வளைத்து, கூட்டம் கூட்டமாக வரும் அந்த உயிர்களை, உன்னுடைய
நெருப்பு மயமான வாய்களால் உண்கிறாய். எல்லா இடங்களிலும் பரவியுள்ள, உன்னுடைய தீவிரமான
ஒளிக்கதிர்களால், இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் நீ கொளுத்திக் கொண்டிருக்கிறாய்.
31.தேவதேவனே!
இந்த பயங்கரமான உருவம் உடைய நீ யார்? நான் உன்னடி பணிகிறேன். என் மேல் கருணை காட்டு!
படைப்புக்கெல்லாம் முன்னமிருந்தே இருக்கும், உன் இயல்பையோ, செயல்களையோ, என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.”
32.ஸ்ரீ
பகவான் கூறினார்: “நான் தான் இந்த உலகங்களெல்லாம் அழிவதற்குக் காரணமாகிய, வலிமை பொருந்திய
காலம். நீ இந்தப் போரில் பங்கெடுத்துக் கொள்ளாவிட்டாலும் கூட, இந்த எதிரணியில் இருக்கும்
வீரர்கள் எல்லாம் இல்லாமல் போய்விடுவார்கள்.
33.ஆகவே,
ஸவ்யசாச்சியே! ( இரண்டுகைகளாலும் அம்பு எறியும் திறன் கொண்டவன்) எழுந்து, போர் புரிந்து,
புகழை அடைவாய்! இந்தப் போர் வீரர்களெல்லாம், ஏற்கனவே என்னால் கொல்லப்பட்டு விட்டார்கள்.
நீ ஒரு நிமித்தமாக மட்டுமே இருப்பாய்.
34.த்ரோணாச்சாரியர்,
பீஷ்மர், ஜயத்ரதர், கர்ணன் போன்ற மற்ற வீரர்களும் என்னால் ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டார்கள்.
ஆகவே எந்த வருத்தமும் இல்லாமல் அவர்களைக் கொல்வாயாக! போர் புரிந்து எதிரிகளை வெற்றி
கொள்வாயாக!”
35.சஞ்சயன்
கூறினார்: “கேசவனின் இந்த வார்த்தைகளைக் கேட்டு அர்ஜுனன் பயத்தால் நடு நடுங்கினான்.
கைகளைக் கூப்பிக் கொண்டு, ஸ்ரீ கிருஷ்ணன் முன் குனிந்து வணங்கி, பயத்தால் வாய் குழறப்
பேசலானான்.”
36.“ஹ்ருஷீகேசா!
புலன்களின் தலைவனே! இந்தப் பிரபஞ்சமே உன்னைப் புகழ்ந்து மகிழ்கிறது. உன்னில் மயங்கிக்
கிடக்கிறது. அரக்கர்கள் உன்னக்கண்டு பயந்து எல்லாத் திசைகளிலும் தப்பியோடுகிறார்கள்.
முழுமையடைந்த யோகிகள் உன்னைப் பணிந்து வணங்குகிறார்கள்.
37.படைப்பின்
ஆதி புருஷனாகிய பிரம்மாவைக் காட்டிலும் உயர்ந்தவனாகிய உன்னை மகாத்மாக்கள் ஏன் பணிய
மாட்டார்கள்? தேவர்களின் தலைவனே! இந்த உலகத்தின் புகலிடமே! உருவமுடையவைக்கும், உருவம்
அற்றவைக்கும் அப்பாற்பட்ட, அழிவற்ற உண்மைப் பொருள் நீ தானே!
38.நீ
தான் முழு முதற்கடவுள். நீயே ஆதி புருஷன். இந்தப் பிரபஞ்சம் நிலைத்திருக்கும் இடமே
நீ தான். அனைத்தையும் அறிபவனும் நீயே. அறியப்பட வேண்டிய பொருளும் நீயே. உன்னதமான இருப்பிடம்
நீயே. எண்ணற்ற வடிவங்கள் கொண்டவனே! இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நீயே நிரம்பி இருக்கிறாய்!
39.நீயே
காற்றின் கடவுளான வாயுதேவன். நீயே தர்மத்தின் தலைவனாகிய யமதர்மன். நீயே நெருப்பின்
கடவுளாகிய அக்னி. நீயே சந்திரன். நீயே படைப்புக் கடவுளான பிரம்மா. நீயே எல்லா உயிர்களுக்கும்
முப்பாட்டன். ஆயிரம் முறை உன்னை நமஸ்கரிக்கிறேன். மீண்டும் மீண்டும், நமஸ்கரிக்கிறேன்.
40.உன்னை
முன் புறத்திலிருந்தும், பின் புறத்திலிருந்தும், எல்லாப் பக்கங்களிலிருந்தும் நமஸ்கரிக்கிறேன்.
நீ எல்லையில்லாத வீரமும், வலிமையும் படைத்தவன். நீ எல்லாவற்றினுள்ளும் பரவி இருக்கிறாய்.
உண்மையில் நீ தான் எல்லாமே!
41.உன்னை
என்னுடைய நண்பன் என்று நினைத்துக் கொண்டு, “ஏ க்ருஷ்ணா”, “ ஏ யாதவா”, “ஏ நண்பா” என்றெல்லாம்
உன்னை மரியாதையில்லாமல் அழைத்திருக்கிறேன். உன்னுடைய மகிமையை அறியாமல், நான் அலட்சியத்தாலோ,
அளவுக்கு மீறிய அன்பாலோ, அப்படி அழைத்து விட்டேன்.
42.விளையாடும்
போதோ, ஓய்வெடுக்கும் போதோ, உட்கார்ந்திருக்கும் போதோ, தனித்திருக்கும் போதோ, மற்றவர்
முன்னிலையிலோ, நான் விளையாட்டாக உன்னை மரியாதை இல்லாமல் நடத்தியதற்கெல்லாம், அச்சுதா! (தன் நிலையில் இருந்து வழுவாதவன்) என்னை மன்னித்துவிடு.
43.இந்தப்
பிரபஞ்சம் முழுவதற்கும், அதில் உள்ள அசையும் மற்றும் அசையாப் பொருட்களுக்கும், தந்தை
நீயே. வழிபடத்தகுந்த உன்னதமான ஆன்மீக குரு நீயே. ஒப்புயர்வில்லாத சக்தி உடையவனே! உனக்குச்
சமமானவரே இந்த மூவுலகங்களிலும் இல்லையென்றால், உன்னை விடச் சிறந்தவர் எப்படி இருக்க
முடியும்?
44.ஆகவே,
ஆராதிக்கத்தக்க ஈசனே! குனிந்து வணங்கி உன் கருணைக்காக இறைஞ்சுகிறேன். ஒரு தந்தை தன்
மகனை மன்னிப்பதைப் போல, ஒரு நண்பன் தன் நண்பனை மன்னிப்பதைப் போல, ஒரு காதலி தன் காதலனை
மன்னிப்பதைப் போல, என் குற்றங்களை நீ மன்னித்துவிடு.
45.இதற்கு
முன் நான் பார்த்தறியாத, உன்னுடைய விஸ்வரூபத்தைக்கண்டு, மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்.
ஆனாலும், என் மனம் பயத்தால் நடுங்குகிறது. தேவ தேவனே! இந்தப் பிரபஞ்சம் முழுவதும் இருப்பவனே!
தயவு செய்து, என் மேல் கருணை வைத்து, உன்னுடைய இனிய உருவத்தைக் காட்டுவாயாக!
46.ஆயிரம்
கைகளை உடையவனே! இந்தப் பிரபஞ்சத்தையே உடலாகக் கொண்டவனே! சங்கையும், சக்கரத்தையும் கையில்
ஏந்தி, தலையில் கிரீடம் அணிந்து, நான்கு கைகளுடன் விளங்கும் உன் அழகிய உருவத்தைக் காண
விரும்புகிறேன். “
47.ஸ்ரீ
பகவான் கூறினார்: “அர்ஜுனா! என் யோக சக்தியால், உனக்கு என்னுடைய பிரகாசமான, எல்லையற்ற,
புராதனமான தெய்வீக உருவத்தைக் காட்டினேன். இதற்கு முன் உன்னைத் தவிர வேறு யாரும் இதைக்
கண்டதில்லை.
48.குரு
வம்சத்தின் மிகச் சிறந்த வீரனே! வேதங்களைக் கற்பதாலோ, வேள்விகள் புரிவதாலோ, சடங்குகளைச்
செய்வதாலோ, தான காரியங்களில் ஈடுபடுவதாலோ, கடுமையான தவத்தாலோ கூட, எந்த மனிதனும் நீ
பார்த்ததை இதுவரை பார்த்ததில்லை.
49.என்
பயங்கரமான உருவத்தைக் கண்டு, பயமோ, குழப்பமோ அடையாதே. பயமின்றி, மகிழ்ச்சியுடன், என்னுடைய
பழைய உருவத்தை, மீண்டும் பார்!”
50.ஸஞ்சயன்
கூறினார்: “ இவ்வாறு கூறி, மகாத்மாவான வாசுதேவன்,
நான்கு கைகளுடன், தனது உருவத்தைக் காட்டினார். பின்னர், பயந்திருந்த அர்ஜுனனை சமாதானப்
படுத்தும் பொருட்டுத் தனது இரண்டு கைகளுடன் சாதாரணமான உருவத்தைக் காட்டினார்.”
51.அர்ஜுனன்
கூறினான்: ” கிருஷ்ணா! இரண்டு கைகளுடன் உன்னுடைய இந்த உருவத்தைப் பார்த்தபின் நான்
எனது பழைய மன நிலையை அடைந்து விட்டேன். என் மனமும் எப்போதும் போல் ஆகிவிட்டது.”
52.ஸ்ரீ
பகவான் கூறினார்: “என்னுடைய இந்த விஸ்வரூபத்தைப் பார்ப்பது மிகவும் அரிது. தேவர்கள்
எல்லாம் தினமும் இதைக் காண மிகுந்த ஆவலுடன்
இருக்கிறார்கள்.
53.வேதங்களைக்
கற்பதனாலோ, தவத்தாலோ, தானத்தாலோ, வேள்விகளாலோ, நீ பார்த்த என்னுடைய அந்த உருவத்தைப்
பார்க்க முடியாது.
54.அர்ஜுனா!
கலப்படம் இல்லாத தூய பக்தியால் மட்டுமே, என்னை இவ்வாறு காண முடியும். பரந்தபனே! ( எதிரிகளை
எரிப்பவனே) என்னுடைய திவ்ய தரிசனம் பெற்றவர்கள், என்னுள் புகுந்து என்னுடன் கலந்து
விடுவார்கள்.
55.தனது
எல்லாக் கடமைகளையும் என் பொருட்டு நிறைவேற்றுகின்ற, என்னையே நம்பி இருக்கின்ற, என்னிடம்
மிகுந்த அன்பு உள்ள, பற்றுகளைத் துறந்த, எந்த உயிர்களிடத்தும் வெறுப்பு இல்லாத, என்
பக்தர்கள் என்னை வந்தடைவார்கள்.
சுபம்
https://www.blogger.com/blog/post/edit/8301939112718011873/387257025770723098
https://www.blogger.com/blog/posts/8301939112718011873
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக