திங்கள், 27 நவம்பர், 2023

 

ஸ்ரீமத் பகவத் கீதை

 

பத்தாவது  அத்தியாயம்

 விபூதி யோகம்

 இறைவனின் அளவிட முடியாத மகிமை

  

(அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணருடைய  தெய்வீகமான செல்வச்செழிப்பைத் தனக்கு முழுமையாக விளக்கும்படி வேண்டிக் கொள்கிறான். ‘எந்த ஒரு பொருளாயிருந்தாலும், விலங்காக இருந்தாலும், மனிதனாக இருந்தாலும், பருவங்களாக இருந்தாலும், அவற்றுள் மிகச் சிறப்பு வாய்ந்தவனாக இருப்பவன் நானே’ என்று கிருஷ்ணர் தெரிவிக்கிறார்.

இந்த அத்தியாயத்தில், மிகவும் அழகாகவும், சுருக்கமாகவும், தன்னுடைய தெய்வீகமான சிறப்புகளை, அர்ஜுனனுக்கு விளக்குகிறார், ஸ்ரீ கிருஷ்ணர்.)


1.     ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்: “ வலிமையுடைய தோள்களை உடைய அர்ஜுனா! என்னுடைய தெய்வீகமான வார்த்தைகளை மீண்டும் கேள்! நீ என்னுடைய பிரியமான நண்பன் ஆகையால், உனது நன்மைக்காகத் திரும்பவும் கூறுகிறேன்.

 

2.     தேவர்களும், மகரிஷிகளும் கூட என்னுடைய மூலத்தை அறிய மாட்டார்கள். அந்தத் தேவர்களுக்கும், மகரிஷிகளுக்கும், மூலமே நான் தான்.

 

3.     எனக்குப் பிறப்பும் இல்லை; தொடக்கமும் இல்லை. நான் தான் இந்தப் பிரபஞ்சத்தின் தலைவன். இந்த உண்மையை அறிந்தவர்கள் மோகத்தில் இருந்தும், அனைத்து விதமான தீமைகளில் இருந்தும் விடுதலை அடைகிறார்கள்.

 

4.     புத்தி, அறிவு, எண்ணங்களில் தெளிவு,  மன்னிக்கும் குணம், வாய்மை, புலன்களின் மீதும், மனத்தின் மீதும் கட்டுப்பாடு, இன்பம், துன்பம், பிறப்பு, இறப்பு, பயம், தைரியம்,

 

5.     அஹிம்சை, சமபாவம், திருப்தி, தவம், தானம், புகழ்ச்சி, இகழ்ச்சி ஆகிய மனிதர்களுடைய பல விதமான குணங்களும் என்னில் இருந்து தான் தோன்றுகின்றன.

 

6.     சப்தரிஷிகளும், சனகர், சனந்தனர், , சனாதனர், சனத்குமாரர்  என்ற நான்கு பிரம்ம குமாரர்களும், பதினான்கு மனுக்களும், என் மனதில் இருந்து தான் தோன்றினார்கள். அவர்களில் இருந்து இவ்வுலகில் உள்ள பிற மனிதர்கள் தோன்றினார்கள்.

 

7.     என்னுடைய இத்தகைய சிறப்புகளை உள்ளது உள்ள படி அறிந்தவர்கள், நிலையான பக்தியுடன், என்னுடன் இணைகிறார்கள். இதில் யாதொரு ஐயமும் இல்லை.

 

8.     இந்தப் படைப்புக்கெல்லாம் மூலபுருஷன் நான் தான். எல்லாம், என்னில் இருந்து தான் புறப்படுகின்றன. இதையுணர்ந்த ஞானிகள் தீவிர நம்பிக்கையுடனும், பக்தியுடனும் என்னை வழிபடுகிறார்கள்.

 

9.     என்னுடைய பக்தர்கள், தங்கள் மனத்தை என் மேல் செலுத்தித் தங்கள் வாழ்வையே எனக்கு அர்ப்பணித்து, ஒருவர் மற்றவரிடம் என்னுடைய மகிமைகளைப் பற்றிப் பேசிக்கொண்டு, மிகுந்த திருப்தியும் மகிழ்ச்சியும் அடைகிறார்கள்.

 

10.என்னில் அன்பும் பக்தியும் வைத்துத் தங்கள் மனதால் எப்போதும் என்னுடன் இணைந்திருப்பவர்களுக்கு, என்னை அடைவதற்கான தெய்வீக அறிவை நான் வழங்குகிறேன்.

 

11.அவர்களுடைய உள்ளத்துள் உறையும் நான், அவர்கள்

மீது தயை கூர்ந்து, ஞானமென்னும் திருவிளக்கால், அவர்களுடைய அறியாமை என்னும் இருளைப் போக்குகிறேன்.”

 

12.அர்ஜுனன் கூறினான்: “நீயே உயர்ந்த பரம்பொருள்; நீயே அடைவதற்குச் சிறந்த இடம்; நீயே புனிதப்படுத்துபவன்; நீயே எப்போதும் இருக்கின்ற, பிறப்பற்ற, மூலாதாரமான தலைவன்.

 

13.தேவரிஷி நாரதர், அஸிதர், தேவளர், வியாஸர் போன்ற ரிஷிகள் இதை உலகுக்கு அறிவித்திருக்கிறார்கள். இப்போது, நீயே அதை எனக்கு அறிவிக்கிறாய்.

 

14.கேசவா! நீ உண்மையென்று எனக்குக் கூறிய அனைத்தையும் நான் அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். பகவானே! உன்னுடைய உண்மையான ஸ்வரூபத்தை, தேவர்களாலும், அசுரர்களாலும் கூட அறியமுடியாது.

 

15.ஓ புருஷோத்தமா! அனைத்து உயிர்களையும் பிறப்பித்தவனே! அனைத்து உயிர்களின் தலைவனே! தேவதேவனே! இந்தப் பிரபஞ்சத்தின் அதிபதியே! உன்னால் மட்டுமே உன் ஸ்வரூபத்தை அறிந்து கொள்ள முடியும்.

 

16.அனைத்து உலகிலும் ஊடுருவியிருக்கும் உன்னுடைய  தெய்வீக மான செல்வச்செழிப்பை எனக்கு முழுமையாக விளக்குவாயாக!

 

17.பகவானே! யோகத்தின் தலையாய தலைவனே! உன்னை நான் எவ்வாறு அறிய முடியும் என்பதையும், உன்னை எந்த எந்த வடிவங்களில்  நினைத்து தியானிக்க முடியும் என்பதையும் எனக்கு விளக்குவாயாக!

 

18.ஓ ஜனார்த்தனா! பலவிதமாக வெளிப்படுகின்ற உனது மகோன்னதமான சிறப்புகளையும், செல்வங்களையும் பற்றித் திரும்பவும் விளக்கமாகக் கூறுவாயாக! கேட்பதற்கு அமுதம் போல் இருக்கும் உன் சிறப்புகளை எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதேயில்லை.”

 

19.ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்: “குரு வம்சத்துள் சிறந்தவனே! என்னுடைய தெய்வீகமான சிறப்புகளை உனக்குச் சுருக்கமாகக் கூறுகிறேன். ஏனெனில், அவற்றை விவரித்துச் சொல்லிக்கொண்டிருந்தால் அதற்கு முடிவே இல்லை.

 

20.அர்ஜுனா! உறக்கத்தை வென்றவனே! அனைத்து உயிர்களில் உள்ளங்களுக்குள்ளும் நான் அமர்ந்திருக்கிறேன். அனைத்து உயிர்களுக்கும், நானே முதலும், நடுவும், முடிவும் ஆகிறேன்.

 

21.அதிதியின் பன்னிரண்டு புதல்வர்களுள் நான் விஷ்ணு. ஒளி வீசும் பொருட்களுள் நான் சூரியன். மருதர்களுள் ( காற்றின் வகைகள்) நான் மரீசி. நட்சத்திரங்களுள் நான் சந்திரன்.

 

22.வேதங்களுள் நான் சாமவேதம். தேவர்களுள் நான் இந்திரன். புலன்களுள் நான் மனம். உயிர்களுள் நான் அவைகளின் உணர்வு.

 

23.ருத்திரர்களுள் நான் சங்கரன். யக்ஷர்களுள்ளும், ராக்ஷஸர்களுள்ளும் நான் செல்வத்தின் அதிபதியான குபேரன். வசுக்களுள் நான் அக்னி; மலைகளுள் நான் மேருமலை.

 

24.பார்த்தனே! புரோகிதர்களுள் நான் ப்ருஹஸ்பதி. சேனைத் தலைவர்களுள் நான் ஸ்கந்தன். நீர் நிலைகளுள் நான் சமுத்திரம்.

 

25.மகரிஷிகளுள் நான் ப்ருகுமகரிஷி. ஒலிகளுள் நான் ‘ௐம்’என்னும் ஒலி. வேள்விகளுள் நான் ஜபம். மலைகளுள் நான் இமயமலை.

 

26.மரங்களுள் நான் அரசமரம். தேவரிஷிகளுள் நான் நாரதன். கந்தர்வர்களுள் நான் சித்ரரதன். சித்தர்களுள் நான் கபிலன்.

 

27.குதிரைகளுள் நான் ‘உச்சைஸ்ரவஸ்’ என்னும் குதிரை. (இது பாற்கடலை அமுதத்துக்காகக் கடைந்த போது வெளிவந்தது.) கம்பீரமான யானைகளுள் நான் ‘ஐராவதம்’. மனிதர்களுள் நான் அரசன்.

 

28.ஆயுதங்களுள் நான் வஜ்ராயுதம். பசுக்களுள் நான் காமதேனு. பிறப்பின் காரணங்களுள் நான் மன்மதன். சர்ப்பங்களுள் நான் வாசுகி.

 

29.நாகங்களுள் நான் அனந்தன். நீர்களுக்குள் நான் சமுத்திரத்தின் தலைவனாகிய வருணன். பித்ருக்களுள் நான் அவர்களின் தலைவனாகிய அர்யமா. நீதி வழங்குபவர்களுள் நான் யம தர்மராஜன்.

 

30.அசுரர்களுள் நான் ப்ரஹலாதன்.  கட்டுப்படுத்தும் பொருட்களுள் நான் காலம். விலங்குகளுள் நான் சிங்கம். பறவைகளுள் நான் கருடன்.

 

31.தூய்மைப்படுத்துபவர்களுள் நான் காற்று. ஆயுதம் ஏந்தியவர்களுள் நான் ராமன். நீரில் வாழும் உயிர்களுள் நான் முதலை. பாய்ந்தோடும் நதிகளுள் நான் கங்கை.

 

32.அர்ஜுனா! படைப்பின் முதலும், நடுவும், முடிவும் நான் தான். கல்விகளுள் நான் ஆன்மாவைப்பற்றிய கல்வி. வாதங்களுள் நான் தர்க்கம்.

 

33.எழுத்துகளுள் அகாரம் நான். இலக்கணத் தொகைகளுள் நான் ‘த்வந்த்வம்’ ( உம்மைத்தொகை). முடிவற்ற காலம் நான். படைப்பாளிகளுள் நான் பிரம்மா.

 

34.அனைத்தையும் கவர்ந்து செல்லும் மரணம் நான். இனி  வரப்போகும் எதிர்காலத்தின் மூலம் நான். புகழில், அதற்குக் காரணமாகிய இனிய சொல் நான். பெண்களின் குணங்களுள் நினைவாற்றல், புத்தி, தைரியம், மன்னிப்பு ஆகிய குணங்கள் நான் தான்.

 

35.சாம வேதப்பாடல்களுள் நான் ப்ருஹத்சாமம். கவிதையின் சந்தங்களுள் நான் காயத்ரி. மாதங்களுள் நான் மார்கழி, பருவங்களுள் நான் வசந்தகாலம்.

 

36.ஏமாற்றுபவைகளுள் நான் சூதாட்டம். பிரகாசமானவற்றின் பிரகாசம் நான். வெற்றியாளர்களின் வெற்றி நான். உறுதியுடையவர்களின் தீர்மானமும், நல்லவர்களின் நற்குணங்களும் நான் தான்.

 

37.விருஷ்ணி குலத்தவர்களுள் நான் கிருஷ்ணன். பாண்டவர்களுள் நான் அர்ஜுனன். முனிவர்களுள் நான் வேதவ்யாஸன். மதி நுட்பம் நிறைந்தவர்களுள் நான் சுக்ராச்சாரியன்.

 

38.ஒழுங்கை நிலை நாட்டுவதில் நான் தண்டனை ஆக இருக்கிறேன். வெற்றி வேண்டுவோருக்குள் நன்னடத்தையாக இருக்கிறேன். ரகசியங்களுள் நான் மௌனமாகவும், ஞானிகளுள் அவர்களுடைய ஞானமாகவும் இருக்கிறேன்.

 

39. அனைத்து உயிர்களுக்கும் நான் விதையாக இருக்கிறேன், அர்ஜுனா! உயிருள்ள பொருளோ, உயிரற்ற பொருளோ, நான் இல்லாமல் இருக்க முடியாது.

 

40.பரந்தபனே! என்னுடைய மகிமைகளுக்கு முடிவே இல்லை. நான் இப்போது உனக்குக்கூறியதெல்லாம் என்னுடைய அளவிடமுடியாத மகிமைகளின் ஒரு சிறு பகுதி தான்.

 

41.நீ, அழகான, சிறந்த, வலிமையுள்ள எந்தப்பொருளைப் பார்த்தாலும், அது என் மகிமைகளில்  இருந்து வந்த ஒரு சிறிய சுடர் என்பதை அறிவாய்.

 

42.இவை அனைத்தையும் தெரிந்து கொள்வதற்கு என்ன  அவசியம் இருக்கிறது? என்னில் ஒரு மிகச்சிறிய பகுதியின் மூலம் இந்தப் படைப்பனைத்திலும், பரந்து இருந்து, அதை நான் காப்பாற்றுகிறேன். (இதைத் தெரிந்து கொண்டாலே போதும்.)

 

சுபம்

https://www.blogger.com/blog/post/edit/8301939112718011873/3776267746676466787

https://www.blogger.com/blog/posts/8301939112718011873

 

 

ஸ்ரீமத் பகவத் கீதை

 

ஒன்பதாவது  அத்தியாயம்

ராஜ வித்யா யோகம்

( ராஜ வித்தை கற்றல்)

 

(இந்தப் பிரபஞ்சம் முழுவதும் இறைவனே ஊடுருவியிருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டு, அவன் மேல் இடையறாமல் அன்பு செலுத்தித், தான் செய்யும் செயல்களனைத்தையும் அவனுக்கே அர்ப்பணிப்பவர்கள் இறைவனையே அடைகிறார்கள். அவர்களுடைய யோக க்ஷேமங்களின் பொறுப்பை இறைவனே ஏற்றுக் கொள்கிறான்.)

 

 

1.     அர்ஜுனா! பொறாமையற்றவனான உனக்கு, மிகவும் ரகசியமான இந்த ஞானத்தைப் புகட்டப் போகிறேன். இதைப்பெறுவதனால், உலக வாழ்க்கையின் துன்பங்களில் இருந்து நீ விடுதலை பெறுவாய்.

 

2.     ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்: கல்விகளுக்கெல்லாம் அரசன் போன்ற கல்வி இது. மிகவும் ரகசியமானது; கேட்போரைப் புனிதப்படுத்துவது; நேரடியாகப்புரிந்து கொள்ளத்தக்கது; தர்மத்தின் வழியில், இதை அனுசரிப்பதும் எளிது; அதன் பலனோ எக்காலத்தும் இருக்கக்கூடியது.

 

3.     பரந்தபனே! தர்மத்தில் சிரத்தை இல்லாதவர்களால் என்னை அடைய முடியாது. அவர்கள் பிறப்பு-இறப்புச் சுழற்சிக்குட்பட்ட இந்த உலகத்தில் பிறக்கிறார்கள்.

 

4.     இந்தப் பிரபஞ்சம் முழுவதும், என்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் நான் ஊடுருவியிருக்கிறேன். எல்லா உயிர்களும் என்னுள் இருக்கின்றன. ஆனால், நான் அவற்றுள் இருப்பதில்லை.

 

5.     என்னுடைய அற்புதமான தெய்வீக ஆற்றலைப்பார்! அனைத்து உயிர்களையும் படைப்பவனும், காப்பவனுமாக நான் இருந்தாலும், அவைகளின் இயல்பால் நான் எந்த வகையிலும் பாதிக்கப் படுவதில்லை.

 

6.     பலம் பொருந்திய காற்றானது எல்லா இடங்களிலும் வீசினாலும், ஆகாயத்திலேயே இருப்பது போல, அனைத்து உயிர்களும், எங்கெங்கோ இருந்தாலும், என்னுள் தான் இருக்கின்றன.

 

7.     குந்தியின் புதல்வனே! ஒரு கல்ப காலம் ( ஆயிரம் மஹாயுகங்கள் ; ஒரு மஹாயுகம் என்பது நான்கு யுகங்களின் சேர்க்கை) முடியும் போது , அனைத்து உயிர்களும், என்னுடைய மூலமான ஆற்றலில் ஒடுங்கி விடுகின்றன. அடுத்த படைப்பின் தொடக்கத்தில் அவைகளுக்கு மீண்டும் நான் உருவம் கொடுத்து, அவைகளை வெளிப்படுத்துகிறேன்.

 

8.     என் இயல்பான தெய்வீக ஆற்றலால், எண்ணற்ற உயிர்களை, அவைகளின் இயல்பின் படி பிறக்க வைக்கிறேன். எங்கு எப்படி பிறக்கப் போகின்றன என்பது அவைகளின் வசத்தில் இல்லை.

 

9.     தனஞ்சயனே! இத்தனை செயல்களை நான் செய்தாலும், இவை எதுவும் என்னைக் கட்டுப்படுத்துவதில்லை. இந்தச் செயல்களில் இருந்து விலகி நின்று, இவையெல்லாம் எனக்குச் சம்பந்தமில்லாதவை போல இருக்கிறேன்.

 

10.குந்தியின் புதல்வனே! எனது ஆணைப்படி, இயற்கையின் ஆற்றல், உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களை உருவாக்குகிறது. அதன்படி, இந்த உலகம், பலவிதமான மாற்றங்களுக்கு உட்படுகிறது.

 

11.நான் மனித உருவம் எடுத்து இந்தப்பூமியில் அவதாரம் எடுக்கும் போது, மூடர்கள் என்னை அறிந்து கொள்வதில்லை. எல்லா உயிர்களுக்கும் தலைவனாகிய எனது தெய்வீக ஆற்றலை அவர்களால் உணர முடிவதில்லை.

 

12.அவர்கள் இயற்கையின் சக்தியால் மோகத்துக்குட்பட்டுப், பயனற்ற ஆசைகள், பயனற்ற செயல்கள், பயனற்ற அறிவு ஆகியவற்றின் மூலம், அசுர குணங்களை அடைந்து, இறைவனே இல்லை என்று எண்ணத் தொடங்குகிறார்கள்.

 

13.பார்த்தனே! ஆனால், என்னுடைய தெய்வீக சக்தியில் புகலடைந்த மகாத்மாக்கள், கிருஷ்ணனாகிய நான் தான் இந்தப் படைப்புக்கெல்லாம் மூல காரணம் என்பதை அறிந்து, வேறு எந்தச் சிந்தனையும் இன்றி, என்னிடம் மட்டுமே மனதைச் செலுத்துகிறார்கள்.

 

14.அவர்கள் எப்பொழுதும் என் புகழையே பாடிக்கொண்டு, தீவிரமாகப் பயிற்சி செய்து, என்னைப் பணிந்து வணங்கி, என்னில் இணைந்து, என்னை அன்புடன், இடைவிடாமல் வழிபடுகிறார்கள்.

 

15.சிலர், அறிவை வளர்த்துக்கொள்ளும் ஞானவேள்வியில் ஈடுபட்டு என்னைப் பலவிதமாக வழிபடுகிறார்கள். வேறு சிலர் என்னைத் தாங்களாகவே கருதிக் கொள்கிறார்கள்; மற்றும் சிலர் என்னைத் தங்களிலிருந்து வேறானவன் என்று நினைக்கிறார்கள். இன்னும் சிலர் என் தெய்வீக வடிவை எண்ணற்ற உருவங்கள் மூலம் வழிபடுகிறார்கள்.

 

16.வைதிகச் சடங்கும் நானே, வேள்வியும் நானே, வேள்வியில் இடும் ஆஹுதியும் நானே. மருந்தாகும் மூலிகையும் நானே,வேத மந்திரமும் நானே. நானே நெய், நானே நெருப்பு, நானே ஆஹுதி இடும் செயலும் ஆகிறேன்.

 

17.இந்தப் பிரபஞ்சத்துக்கு, நானே தந்தை, நானே தாய், நானே பாதுகாப்பவன், நானே மூல பிதாமகன். நானே தூய்மைப்படுத்துபவன், நானே அறியத்தக்கவன், நானே புனிதமான ‘ஓம்’ என்னும் மந்திரம். நானே ரிக்வேதம், நானே சாமவேதம், நானே யஜுர்வேதம்.

 

18. அனைத்து உயிர்களும் அடைய விரும்பும் குறிக்கோள் நானே. நானே அவைகளைப் பாதுகாப்பவன், அவைகள் செய்யும் செயல்களுக்கெல்லாம் சாட்சி. நானே, அவையனைத்துக்கும், இருப்பிடமும், புகலிடமும், உற்ற நண்பனும் ஆகிறேன். நானே அனைத்துக்கும் மூலம், நானே அனைத்துக்கும் முடிவு, என்னில் தான் இந்தப்படைப்பு நிலை பெற்றிருக்கிறது. நானே அனைத்தையும் வைத்திருக்கும் களஞ்சியம். நானே, அனைத்துக்கும் நிரந்தரமான விதையாகவும் இருக்கிறேன்.

 

19.நானே, சூரியனாய்க் கொளுத்துகிறேன். நானே மழையைக் கொடுக்கிறேன்; அதைப் பெய்யாமல் நிறுத்தியும் வைக்கிறேன். நானே மரணமில்லாத நிலை; நானே மரணத்தின் உருவமும் கூட. அர்ஜுனா! நானே பொருளாகவும் இருக்கிறேன்; அதனுள்ளிருக்கும் ஆத்மாகவும் இருக்கிறேன்.

 

20.பலன்களை விரும்பி, வேதங்களில் கூறப்பட்டுள்ள சடங்குகளைச் செய்பவர்கள், அவை மூலம் என்னை வழிபடுகிறார்கள். வேள்வியின் பிரசாதமாக சோமபானத்தை அருந்தித் தூய்மையடைந்த அவர்கள் தங்கள்  நற்செயல்களால் தேவேந்திரன் வசிக்கும் சுவர்க்கத்துக்குச் சென்று அங்கே தேவர்களுக்குரிய இன்பங்களை அனுபவிக்கிறார்கள்.

 

21.அங்கே , தங்களுடைய புண்ணிய பலன் தீரும் வரை அந்த சுகங்களை அனுபவித்த பின்னர், மீண்டும், பூமியில் பிறக்கிறார்கள்.  இவ்வாறு, உலக இன்பங்களை விரும்பி, வைதிக சடங்குகளைச் செய்பவர்கள், மீண்டும், மீண்டும், இந்த உலகத்திற்கு வந்து போகிறார்கள்.

 

22. இடைவிடாமல், என்னையே நினைத்துக்கொண்டு, என்னிடம் பிரத்தியேக பக்தி செய்பவர்களுடைய யோக க்ஷேமங்களுக்கு  நான் பொறுப்பெடுத்துக்கொள்கிறேன். ( யோகம் - இனி வரவேண்டிய நன்மை. க்ஷேமம்- ஏற்கனவே இருக்கும் நல்ல நிலைமை. அதாவது, இனி வர வேண்டிய நன்மை சரியான நேரத்துக்கு வரும் படியும், ஏற்கனவே இருக்கும் நல்ல நிலைமை கெடாமல் காத்தும் ரக்ஷிக்கிறேன்)

 

23.குந்தியின் புதல்வனே! வேறு தெய்வங்களை சிரத்தையுடன் வழிபடுவோரும், என்னையே தான் வழிபடுகிறார்கள். ஆனால், அவர்கள் தவறான வழியில் வழிபடுகிறார்கள்.

 

24.அனைத்து வேள்விகளையும் அனுபவிப்பவனும் நான் தான். அவையனைத்துக்கும் தலைவனும் நான் தான். இதை அறியத் தவறியவர்கள், மீண்டும் பிறந்து தான் ஆக வேண்டும்.

 

25.தேவதைகளை வழிபடுபவர்கள் தேவதைகளிடையேயும், முன்னோர்களை வழிபடுபவர்கள் முன்னோர்களிடையேயும், பேய், பூதங்கள், போன்றவைகளை வழிபடுபவர்கள், அவைகளிடையேயும் பிறப்பு எடுக்கிறார்கள். ஆனால், என்னை வழிபடுபவர்கள், என்னிடமே வந்து சேர்கிறார்கள்.

 

26.தூய உள்ளத்துடனும், பக்தியுடனும், எனக்கு ஒரு இலையையோ, ஒரு புஷ்பத்தையோ, ஒரு பழத்தையோ, கொஞ்சம் நீரையோ அர்ப்பித்தால் கூட, அவற்றை, நான் மிகவும் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

 

27.குந்தியின் புதல்வனே! நீ எதைச் செய்தாலும், எதைச் சாப்பிட்டாலும் எதை வேள்வியில் ஆஹுதியாய் அளித்தாலும், எதைத் தானமாகக் கொடுத்தாலும், என்ன விதமான தவத்தில் ஈடுபட்டாலும், அவையனைத்தையும் எனக்கு அர்ப்பணித்து விடு.

 

28.இவ்வாறு, உன் செயல்களையெல்லாம் எனக்கு அர்ப்பணிப்பதன் மூலம், செயல்களினால் உண்டாகும் நல்ல அல்லது தீய விளைவுகளில் இருந்து  நீ விடுவிக்கப்படுவாய். மற்ற எதன் மேலும் பற்றின்றி, என் மீதே பற்று வைத்துள்ளதால், நீ இந்த பந்தங்களில் இருந்து விடுதலை பெற்று, என்னை அடைவாய்.

 

29.எனக்கு எல்லா உயிர்களும் சமம் தான்.  நான் யாரையும் விரும்புவதும் இல்லை; வெறுப்பதும் இல்லை. ஆனால், அன்புடன் என்னை வழிபடும் பக்தர்கள் என்னுள் இருக்கிறார்கள்; நான் அவர்களுள் இருக்கிறேன்.

 

30.கொடிய பாவம் செய்தவர்கள் கூட, மனம் திருந்தி, என்மேல் தீவிர பக்தி கொண்டு, என்னை வழிபடுவார்களேயானால், அவர்களும் நல்லவர்கள் என்றே கருதப்படுவார்கள்.

 

31.குந்தியின் புதல்வனே! அவர்கள் விரைவிலேயே தர்மாத்மாக்களாக ஆகி, நிலையான அமைதியை அடைகிறார்கள். என் பக்தர்களுக்கு எப்போதும் அழிவில்லை என்பதைத் தைரியமாக இந்த உலகுக்கு அறிவிப்பாயாக!

 

32.என்னைச் சரணடைபவர்கள், கீழான பிறப்பு எடுத்திருந்தாலும், அவர்கள் பெண்களாக இருந்தாலும், வைஸ்யரோ அல்லது உடலுழைப்பு செய்பவரோ ஆனாலும், மகோன்னதமான பதத்தை அடைவார்கள்.

 

33.அப்படி இருக்கும் போது, அரசர்கள், ராஜரிஷிகள், மற்றும் உயர் குலத்தோரைப்பற்றிக் கூறவும் வேண்டுமா? ஆகவே, நிலையற்றதும், இன்பமில்லாததும் ஆன இந்த உலகத்துக்கு வந்த பின்னர், என் மேல் பக்தி செலுத்துவாயாக!

 

34.எப்போதும் என்னையே நினை! என்னையே பக்தியுடன் வணங்கு. உன் உடலையும் உள்ளத்தையும் எனக்கு அர்ப்பணித்து விடுவதால், நீ நிச்சயம் என்னிடம் வந்து விடுவாய்.

 

சுபம்

 

https://www.blogger.com/.../830193911.../2451952985088122531

https://www.blogger.com/blog/posts/8301939112718011873

 


 

ஸ்ரீமத் பகவத் கீதை

 

எட்டாவது  அத்தியாயம்


அக்ஷர ப்ரம்ம யோகம்


(அழிவற்ற பரம்பொருளைப்பற்றிய அறிவு)

  

(பரப்பிரம்மத்தின் அழிவற்ற தன்மையைப்பற்றியும், பரம்பொருளையே எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தால், நிச்சயம் அவனை அடைய முடியும் என்பதையும், இறைவனை அடைந்தவர்கள், பிறவிப் பெருங்கடலைக் கடந்து விடுகிறார்கள் என்பதையும்,, இந்த உலகங்கள் எல்லாம், திரும்பத்திரும்ப அழிந்தாலும், மீண்டும் மீண்டும் தோன்றினாலும், இறைவனை அடைந்து விட்டவர்கள் அந்த மாற்றங்களால் பாதிக்கப் படுவதில்லை என்பதையும், ஸ்ரீ க்ருஷ்ணர் அர்ஜுனனுக்கு எடுத்துரைக்கிறார்.)



1.     அர்ஜுனன் கேட்டான்: “ புருஷோத்தமா! ‘ப்ரம்மம்’ என்பது எது? ‘அத்யாத்மம்’ என்பது எது? ‘கர்மா’ என்பது என்ன? ‘அதி பூதம்’ என்பது என்ன, ‘அதி தைவம்’ என்பது என்ன?

 

2.     மதுசூதனா! நம் உடலில் இருக்கும் ‘அதியக்ஞன்’ என்பவன் யார்? நிலையாக உன் மேல் பக்தி கொண்டவர்கள் மரணத்தருவாயில் உன்னை எப்படி அறிகிறார்கள்?”

 

3.     ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்: “அழிவற்ற பரம்பொருள் ‘ப்ரம்மம்’ எனப்படுகிறது. ஒருவருடைய தனிப்பட்ட ஆத்மா ‘அத்யாத்மம்’ எனப்படுகிறது. இந்த உலகில் உள்ள உயிர்கள் செய்யும் செயல்களும், அவைகளின் வளர்ச்சியும், அவைகள் கொடுக்கும் பலன்களும் ‘கர்மா’ என்றழைக்கப்படுகின்றன.

 

4.     மனிதருள் சிறந்தவனே! எப்பொழுதும் மாறிக்கொண்டே இருக்கும் இந்த உலகப்பொருட்கள் ‘அதிபூதம்’ என்றழைக்கப்படுகின்றன. இந்தப் படைப்பை வழி நடத்தும் தேவதைகளுக்கெல்லாம் தலைவன், ‘அதிதைவம்’ என்றழைக்கப்படுகிறான். எல்லா உயிர்களுக்குள்ளும் உட்பொருளாக வசிக்கும் நான், வேள்விகளுக்கெல்லாம் தலைவனாகையால், ‘அதியக்ஞன்’ என்றழைக்கப்படுகிறேன்.

 

5.     மரணத்தருவாயில் என்னை நினைத்துக்கொண்டே உடலை நீக்குபவர்கள் என்னிடம் வந்து சேர்கிறார்கள். இதில் யாதொரு சந்தேகமும் இல்லை.

 

6.      குந்தியின் புதல்வனே! மரணம் அடையும் போது ஒருவன் எதை நினைத்துக் கொண்டிருக்கிறானோ, அதைப்பற்றிய எண்ணங்களிலேயே மூழ்கியிருப்பதால், இறந்த பின் அதுவாகவே ஆகிறான்.

 

7.     ஆகவே, என்னையே எப்பொழுதும் நினைத்துக்கொண்டு, போர் புரியும் உன் கடமையைச்செய். உன் மனதையும், புத்தியையும் எனக்கு சமர்ப்பித்து விட்டால், நீ நிச்சயம் என்னை அடைவாய். இதில் சந்தேகம் இல்லை.

 

8.     பார்த்தனே! பரம்பொருளாகிய என்னையே எப்போதும் மனதில் நினைத்துக்கொண்டு, சற்றும் பிசகாமல், தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால், நிச்சயம் என்னை அடைவாய்.

 

9.     இறைவன் அனைத்தும் அறிந்தவன், மிக மிகப்பழமையானவன், அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருப்பவன், நுண்ணியவற்றிலெல்லாம் நுண்மையானவன், அனைத்துக்கும் துணையானவன், நினைத்துப்பார்க்க முடியாத தெய்வீக வடிவம் கொண்டவன். சூரியனைக்காட்டிலும் பிரகாசமானவன், அதே சமயம், இருளைக் காட்டிலும் இருட்டானவன்.

 

10.மரணத் தருவாயில் இருக்கும் ஒருவன், நிலையான மனத்துடன், யோகப்பயிற்சியின் மூலம் , உயிர்ச்சக்தியை புருவங்களுக்கு மத்தியில் வைத்து பரம்பொருளைத் தியானித்துக்கொண்டே இருந்தால், நிச்சயம் இறைவனை அடைகிறான்.

 

11. வேதவிற்பன்னர்கள் ‘அழிவற்றவன்’ என்று வர்ணிக்கிறார்கள். தவசிரேஷ்டர்கள் உலக இன்பங்களைத் துறந்து, பிரம்மச்சரிய விரதத்தைக் கடைப்பிடித்து, அவனுடன் கலந்து விட முயற்சிக்கிறார்கள். இறைவனை அடைய வேண்டும் என்ற லட்சியத்தை அடையும் வழியை, உனக்குச் சுருக்கமாகக் கூறுகிறேன், கேள்!

 

12.உடலின் எல்லாக் கதவுகளையும் மூடி, மனதை மார்புப்பகுதியில் செலுத்தி, உயிர்ச்சக்தியை தலைக்கு எடுத்துச்சென்று, தியானத்தில் நிலையாக நிற்க வேண்டும்.

 

13.பரம்பொருளாகிய என்னை நினைத்துக்கொண்டு, ‘ஓம்’ என்னும் மந்திரத்தை உச்சரித்துக்கொண்டு, இந்த உடலை விட்டு நீங்குபவன் உன்னதமான பரமபதத்தை அடைகிறான்.

 

14.பார்த்தனே! என்னைப் பிரத்தியேகமான பக்தியுடன் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கும் யோகிகள், என்னுள் எப்போதும் மூழ்கி இருப்பதால், என்னை அவர்களால் எளிதில் அடைய முடியும்.

 

15.தங்கள் முயற்சியில் முழுமையடைந்த அந்த மகாத்மாக்களுக்கு, நிலையில்லாததும், துன்பம் நிறைந்ததுமாகிய மறு பிறப்பு கிடையாது.

 

16.அர்ஜுனா! குந்தியின் மகனே! பிரம்ம லோகம் வரையுள்ள இந்தப்படைப்பில், எந்த உலகத்தில் பிறந்தாலும், மறுபிறவி என்பது உண்டு. ஆனால், என்னிடம் வந்தவர்களுக்கு மறுபிறவியே இல்லை.

 

17.பிரம்மாவின் ஒரு நாள் என்பது ஆயிரம் மஹாயுகங்கள் ( நான்கு யுகங்கள் சேர்ந்தது ஒரு மஹாயுகம்) சேர்ந்தது. அவருடைய இரவும் அதே போலத்தான். ஞானிகள் பகல், இரவைப்பற்றிய இந்த உண்மையை அறிவார்கள்.

 

18.பிரம்மாவின் ஒரு நாள் விடியும் பொழுது, உருவமில்லாத பரம்பொருளிடமிருந்து உயிரினங்கள் வெளிப்படுகின்றன. அந்த நாள் முடியும் போது அவையனைத்தும் மீண்டும் அந்த உருவமற்ற பரம்பொருளுக்குள்ளே அடங்கிவிடுகின்றன.

 

19. பார்த்தனே! அதாவது, ஒவ்வொரு முறையும் பிரம்மாவின் நாள் விடியும் பொழுது, ஆயிரக்கணக்கான உயிர்கள் மீண்டும், மீண்டும் பிறந்து, வாழ்ந்து, இறக்கின்றன.  பிரம்மாவின் இரவு தொடங்கும் போது அனைத்து உயிர்களும், உருவமற்ற பரம்பொருளில் லயித்து உருவம் இல்லாமல் போகின்றன. பிரம்மாவின் அடுத்த நாள் விடியும் பொழுது, அவை மீண்டும் பிறக்கப்போகின்றன.

 

20.வெளிப்படாமலும், வெளிப்பட்டும், தோன்றும் இந்தப்படைப்பையும் தாண்டி, என்றுமே அழியாத  ஒரு பரிமாணம் இருக்கிறது.  மற்ற உலகங்கள் இல்லாமல் போகும் போது கூட, அந்தப்பரிமாணம் இல்லாமல் போவதில்லை.

 

21.உருவமற்றிருக்கும் அந்தப்பரிமாணம் தான் என்னுடைய மேலான இருப்பிடம். அதை அடைவது தான் ஒருவனுக்கு மகத்தான லட்சியம். அதை அடைந்த பின், ஒருவன் இந்த அழியும் உலகத்துக்கு வருவதில்லை. .

 

22.இங்கிருப்பதிலேயே, எல்லாவற்றையும் விட உயர்ந்தது அந்தப்பரம்பொருள் தான். அவர் எல்லா இடங்களிலும் இருந்தாலும், எல்லா உயிர்களும் அவருள்ளே இருப்பது உண்மையானாலும், அவரை பக்தியால் மட்டுமே அடைய முடியும்.

 

23.பரத வம்சத்தவருள் சிறந்தவனே! இந்த உலகத்தை விட்டுப்போகும் போது, இனி பிறக்காமல் மோக்ஷம் அடையும் வழியையும், மீண்டும் பிறவிகள் எடுப்பதற்கான வழியையும் இப்போது உனக்குச் சொல்கிறேன்.

 

24.  பிரம்மத்தை அறிந்தவர்கள், உத்தராயண புண்யகாலத்து ( சூரியன் வடக்கு நோக்கிப் பயணிக்கும் காலம்) வளர்பிறையில், பகலில் மரணித்தால், பரம்பொருளையே அடைகிறார்கள்.

 

25.வைதிக சடங்குகளை ஒழுங்காகச் செய்தவர்கள், தக்ஷிணாயன புண்யகாலத்துத்( சூரியன் தெற்கு நோக்கிப் பயணிக்கும் காலம்) தேய்பிறையில், இரவில் மரணித்தால், மேலான உலகத்துக்குச் சென்று, அங்கே சில காலம் இருந்து விட்டு, மீண்டும் பூமியில் பிறக்கிறார்கள்.

 

26.முதலில் கூறப்பட்ட ஒளி மயமான வழியும், பின்னர் கூறப்பட்ட இருள் மயமான வழியும் உலகில் எப்போதுமே இருப்பவை தான். ஒளியின் வழி மோக்ஷத்துக்கு வழி வகுக்கிறது. இருளின் வழி, மறுபிறவிக்கு வழி வகுக்கிறது.

 

27.பார்த்தனே! இந்த இரண்டு வழிகளின் ரகசியத்தை உணர்ந்த யோகிகள், என்ன செய்வது என்று திகைப்பதில்லை. ஆகவே, நீ எப்போதும் யோகத்தில் ஈடுபட்டு, இறைவனுடன் ஒன்றி இருப்பாயாக!

 

28.இந்த ரகசியத்தை உணர்ந்த யோகிகளுக்கு, வைதிக சடங்குகள் செய்பவர்கள், வேதம் கற்பவர்கள், வேள்விகள் செய்பவர்கள், தவம் செய்பவர்கள், தானம் செய்பவர்கள், ஆகியோர் பெறும்  புண்ணியத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிக புண்ணியம் கிடைக்கிறது. அத்தகைய யோகிகள் பரமபதத்தை அடைகிறார்கள்.

 

சுபம்

https://www.blogger.com/blog/post/edit/8301939112718011873/6460284916642140424

https://www.blogger.com/blog/posts/8301939112718011873